வியாழன், 8 மே, 2014

முதலுதவி சிகிச்சை முறைகள்.



மரியாதைக்குரியவர்களே,
     வணக்கம்.
          ''அனைத்திந்திய சாரதிகள்'' வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம். விபத்தின்போது செய்யும் முதலுதவி பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
                     முதலுதவி பற்றிய  கட்டுரை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு நன்றி.
        

                             மோட்டார் வாகன சாலை விபத்துகளை தடுப்பதும், அவசர சிகிச்சைகளை பற்றி கோவை என்.ஜி.மருத்துவமனை சேர்மன் மற்றும் லேப்ராஸ்கோபி,  எண்டாஸ்கோபி சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மனோகரன் விழிப்புணர்வு அளித்தார். அவர் கூறியதாவது: விபத்து என்பது யாரும் எதிர்பாராமல்  நடக்கும் ஒரு நிகழ்வு, விபத்துக்களை பலவிதமாக பிரிக்கலாம். சாலை விபத்து, நில நடுக்கம், தீ விபத்து, வெள்ள விபத்து, மின்சார விபத்து என்று  கூறலாம்.

                             மேற்கூறிய விபத்துகளில் மக்கள் அதிகமாக பாதிக்கப்படுவது சாலை விபத்து. நம் இந்திய நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு 14 பேர் இறக்கிறார்கள்.  தேசிய குற்றவியல் துறையின் கணக்கின்படி வருடத்திற்கு 135000 பேர் இறக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும், இக்கணக்கெடுப்பின்படி 25 வயதுக்கு  உட்பட்டவர்களின் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. அதுவும் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படும் விபத்தின் சராசரி விகிதம் அதிகமாக உள்ளது.  விபத்தில் 44 சதவிகிதம் இறப்பு இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்களாகவும், 34 சதவிகிதம் இறப்பு சாலையில் நடந்து செல்பவர்களாகும்.

        விபத்திற்கான காரணங்கள்

                     குடிப்பழக்கம், கவனக்குறைவு, கைபேசியை உபயோகித்து கொண்டே வாகனங்களை ஓட்டுவது, சாலை விதிகளை கடைபிடிக்காமல் இருப்பது,  அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, தலை கவசம் அணியாதது, வாகனங்களை சரியாக பராமரிக்காமல் இருப்பது, உறக்கமின்மை, அசதி, சீட் பெல்ட்  அணியாமல் வாகனத்தை இயக்குவது, போட்டி போட்டு கொண்டு வாகனங்களை இயக்குவது.

சாலை விபத்தை தவிர்க்கும் முறைகள்:

                    குடி மற்றும் போதையில் இல்லாத போது வாகனங்களை இயக்குவது, வாகனங்களை ஓட்டும் போது முழு  கவனம் சாலையில் இருக்க வேண்டும். கைபேசியே உபயோகிக்காமல் வாகனத்தை ஓட்டுவது, 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை  ஓட்டுவதற்கு ஊக்குவிக்காமல் இருப்பது, 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் இருப்பது. சாலை  விதிகளை முறைப்படி கடைபிடிப்பது, தலை கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது.

சாலை விபத்தில் அடிபட்டவர்களுக்கு முதலுதவி:

                       அடிபட்டவரால் பேச முடிகிறதா, பெயர் என்ன? சீராக சுவாசிக்கிறாரா என்றும் நாடி துடிப்பையும் அறிய வேண்டும். உடனடியாக அவசர ஊர்தியை  வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவரிடம் நடந்தவற்றை கூற வேண்டும். சுவாசம் இல்லை என்றால்  அடிபட்டவரின் வாயை திறந்து சுவாசிப்பதற்கு ஏதாவது இடைஞ்சல் இருக்கிறதா என்று அறிய வேண்டும். ஏதாவது இடைஞ்சல் இருந்தால், வாயினுள்  ஆள்காட்டி விரலையோ அல்லது நடுவிரலையோ உள் செலுத்தி இடைஞ்சலை சரிப்படுத்த வேண்டும்.

                      அவ்வாறு செய்யும் பொழுது, அடிபட்டவர் விரலை கடிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாடித் துடிப்பு குறைந்து, சுவாசம்  குறைந்து காணப்பட்டால் வாய்க்கு வாய் சுவாசமும், வாய்க்கு, மூக்கு சுவாசம் கொடுக்க வேண்டும். வாயில் ரத்த கசிவு அல்லது வாந்தி எடுத்தால்  அவருடைய உடம்பையும், தலையையும் ஒரு புறமாக சாய்த்து படுக்க வைக்க வேண்டும். இதனால் புறை போவதை தவிர்க்கலாம். ஒரு புறமாக  படுக்க வைக்கும் பொழுது கீழ் இருக்கும் கை நீட்டியும், மேல் உள்ள கை அவருடைய மார்பின் மேல் இருக்க வேண்டும்.

                      இரத்தக்கசிவு அதிகமாக இருந்தால் அந்த பாகத்தை அழுத்தி பிடிக்க வேண்டும். நம்முடைய உள்ளங்கையை வைத்தோ அல்லது கைவிரல்களை  வைத்தோ அழுத்தி பிடிக்க வேண்டும். அடிபட்டவர் விழுந்திருக்கும் போது அவருடைய உடம்பின் நிலை மாறுபட்டு காணப்பட்டால் அவரை அசைக்க  கூடாது. உடனடியாக மருத்துவரின் சிகிச்சைக்கு கொண்டு போக வேண்டும். இவ்வாறு இருக்கும் போது குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது.  ஏனென்றால் புறை ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்படும்.

                  நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது கவனத்தில் வைக்க வேண்டியவை. நோயாளியை ஸ்ட்ரெட்சர் கொண்டு அவரை  மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவருடைய முதுகையும், கழுத்தையும் நேரடியாக வைக்க வேண்டும். நோயாளி நேராக படுத்திருக்க  வேண்டும். கை அல்லது கால ல் ரத்த கசிவு இருந்தால், அப்பாகத்தை உயர்த்தி பிடித்து ரத்த கசிவை அழுத்தி பிடிக்க வேண்டும். அவர் தொடர்ந்து  மூச்சு விடுகிறாரா? அவருடைய நாடி துடிப்பும் சீராக இருக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

  
விபத்து என்பது நாம் வசிக்கும் வீட்டிலிருந்து பொழுதுபோக்கு இடம் வரை,குழந்தைகள் முதல் வயதான முதியோர் வரை,ஆண்,பெண் வேறுபாடு இல்லாமல் யாருக்கும் எப்போதும் எங்கும் நடக்கலாம்.அவ்வாறு விபத்து நடக்கும்போது மருத்துவனை செல்லும்வரை அல்லது மருத்து உதவி கிடைக்கும்வரை நோயாளிக்கு முதலுதவி அவசியம் தேவைப்படுகிறது.முதலுதவி செய்வதால் நோயாளியின் உயிர் காக்கப்படுகிறது.காயம் பெரிதாகாமல் பாதுகாப்பளிக்கப்படுகிறது.காயம் விரைவில் குணமடைய வைக்கிறது.
முதலுதவிக்கு தேவையான மருந்துகளும்,கருவிகளும் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
         * முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

* முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

* அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.

* பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

* முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

* அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மன தைரியத்தை அளிக்க வேண்டும்.

* பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.

* பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வோரு வீட்டிலும் ஒரு முதலுதவிப்பெட்டி வைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக